அமெரிக்காவில் நடுவானில் இரண்டாம் உலகப் போர் கால விமானங்கள் மோதி விபத்து: 6பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் விமான சாகச நிகழ்ச்சியின்போது, இரு இரண்டாம் உலகப் போர் கால விமானங்கள் வானில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன் தினம் (சனிக்கிழமை) தரையில் உள்ள இலக்குகளைக் குறிவைத்து வானிலிருந்து குண்டு வீசும் பி-17 என்ற விமானம் மீது பி-63 கிங் கோப்ரா என்ற போர் விமானம் மோதி விபத்து ஏற்பட்டது.

வானில் வளைந்து திரும்பி மிக வேகமாகச் சென்று பி-17 மீது மோதிய கிங் கோப்ரா விமானம், துண்டு துண்டாக சிதறி விழுந்தது. பி-17 விமானம் தரையில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்தின் தலைவர் கூறுகையில், பி-17 விமானத்தில் 4 முதல் 5 பேர் இருந்ததாகவும், கிங் கோப்ரா விமானத்தில் விமானி மட்டும் இருந்ததாகவும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நவம்பர் 11ஆம் திகதி முன்னாள் போர்ப்படை வீரர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டலஸ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தனியார் நிறுவனம் சார்பில் விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் பயன்படுத்தப்பட்ட 40க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *