மலையகத்தில் 700 பேர் மின்சார வயரில் தொங்கும் நிலை (படங்கள் இணைப்பு)

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் கிவ் மேல் பிரிவு தோட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக புதிய மின் கம்பங்கள் நடப்பட்டும், இது வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த மின் கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்றும், பழைய மின் கம்பத்தில் மிகவும் உடைந்து விழும் நிலையில் காணப்படுவதால் , தோட்டத்தில் வாழும் சுமார் 700 பேர் , ஆபத்தான் நிலையில் இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கிவ் மேல் பிரிவு தோட்டத்தில் சுமார் 120 வது குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் பெரியவர்கள் முதல் சுமார் 700 இற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த தோட்டத்தில் 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மரத்திலான மின் கம்பங்கள் ஊண்டப்பட்டு மின் இணைப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மின் கம்பங்கள் தற்போது அடியில் இத்துப்போய் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்த விடயம் குறித்து அங்குள்ள கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டதனை தொடர்ந்து குறித்த மின் கம்பங்களை மாற்றுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய மின் கம்பங்கள் நடப்பட்டன.

எனினும் குறித்த புதிய மின் கம்பங்களில் மின் இணைப்பு பொருத்தப்படாததன் காரணமாக அந்த மின் கம்பங்கள் உடைந்து வீழ்ந்து தோட்டத்தொழிலாளர்களின் தொடர் குடியிருப்புக்கள் தீபற்றி எரியக்கூடிய ஆபத்து காணப்படுவதாகவுவும் மக்கள்  தெரிவிக்கின்றனர்.

இந்த பகுதியில் உள்ள தொடர் குடியிருப்புகளில் உள்ள கூரையின் மீது தற்போது மின் இணைப்பு வயர்கள் தகரத்துடன் உரசிக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *