சர்வதேச நீரிழிவு தினத்தையொட்டி கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் – இலங்கையுடன் இணைந்து திருகோணமலை, கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலை ஊடாக நடாத்திய சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும், கண்காட்சியும் இன்று (14) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அன்டென் அனஸ்ரின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இந்திய துணைத் தூதரக அதிகாரி (யாழ்) ஸ்ரீ ராக்கேஷ் நட்ராஜ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் அவர்களும், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் மற்றும் திருகோணமலை நகரசபை செயலாளர் வி.ராஜசேகர் உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர். 

இன்றும், நாளையும் (15)இடம்பெறவுள்ள இந்த விழிப்புணர்வு கண்காட்சியில் நீரிழிவு நோய்க்கான இரத்தப் பரிசோதனைகளுடன் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. அத்துடன் பாரம்பரிய உணவு முறை தொடர்பான கண்காட்சியும், விற்பனையும் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு உச்ச பயனை பெறுமாறும் வேண்டப்பட்டுள்ளனர்.