புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குணராஜா சற்குணராஜாவின் அகவை தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு – இந்துபுரம் பகுதியில் வசிக்கும் முன்னாள் போராளி ஒருவரின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக நன்னீர் மீன் குஞ்சுகள் உற்பத்தி கேணி அமைக்கப்பட்டு இன்று பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு இந்துபுரம் 154 ஆம் கட்டை பகுதியில் அமைக்கப்பட்ட, இந்த நன்னீர் மீன் குஞ்சுகள் உற்பத்தி கேணி அமைப்பு திட்டமானது,
கனடாவாழ் குணராசா சற்குணராசாவின் முதற்கட்ட நிதிப்பங்களிப்பில், அமரர் குணராஜாவின் குடும்பத்தின் சார்பில், குணராசா உதயராஜாவின் நெறிப்படுத்தலில், சுமார் 4 இலட்சம் நிதி உதவியில் அமைக்கப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசு மணிசேகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன், புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர், மாணிக்கவாசன் பவுண்டேஷனின் உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புத்தனர்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை நிகழ்த்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கருத்து தெரிவிக்கையில்,
இங்கு, மணிசேகரன் அவர்களின் அழைப்பை ஏற்று வருகை தந்திருந்தேன், ஆனால் இங்கு வருகை தந்ததன் பின்பு, தெரிந்து கொண்ட விடயம் என்னவென்றால், உதயராசா என்னும் உண்மையான, நாட்டை நேசிக்கும் விசுவாசி ஒருவர் கனடாவில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கின்றார் என்பதை முதல் முதல் அறிந்து கொண்டுள்ளேன்,
அவருக்கு வாழ்த்துக்கள், அவரது சேவைகள் தொடர வேண்டும். இது வெறுமனே ஒரு விடயம் அல்ல. இங்கே மீன்களை வளர்த்து பெருமளவான வருமானத்தை ஈட்டும் ஒரு தொழில் ஆகும். இதை எப்படி தொடர்சியாக கொண்டு செல்வது என்பது தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு பயனாளிகள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார்.
குறித்த திட்டத்தை பெற்றுக்கொண்ட பயனாளி மற்றும் அவரது குடும்பத்தினர், இந்த உதவியை செய்த கொடையாளருக்கு பெரும் நன்றியை தெரிவித்ததுடன், இத்திட்டத்தை மென்மேலும் அபிவிருத்தி செய்வதாகவும் தெரிவித்தனர்.