நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம்: கனடா அறிவிப்பு!

நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம் என்ற அறிவிப்பை கனேடிய இராணுவம் விடுத்துள்ளது.

இதுவரையில், கனடாவில் வசித்து வரும் நிரந்தர குடியிருப்பாளர்கள் இராணுவ வெளிநாட்டு விண்ணப்பத்தாரர் என்கிற நுழைவு திட்டத்தின் கீழ் மட்டுமே இராணுவத்தில் சேர தகுதி பெற்றிருந்தனர்.

தனிநபர்களுக்கான இந்த திட்டம், பயிற்சி செலவுகளை குறைப்பதோடு, விமானி அல்லது மருத்துவர் போன்ற சிறப்பு தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும். ஆனால் தற்போது கனடா நாட்டின் குடிமக்களை போலவே 18 வயதுக்கு மேற்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்கள் இராணுவத்தில் எளிதில் சேரலாம்.

அதேபோல் 16 வயது நிரம்பியவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் இராணுவத்தில் இணையலாம். இராணுவத்தில் அதிகாரியாகும் எண்ணம் இருந்தால் அதற்குரிய கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஆண்டில் சுமார் 6 ஆயிரம் உறுப்பினர்களை புதிதாக சேர்க்க இலக்கு வைக்கப்பட்ட நிலையில், அதில் பாதி பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க கனடா அரசு முடிவு செய்திருக்கிறது. எனவே இராணுவத்தில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினரை அனுமதிப்பதன் மூலம் இராணுவ பலத்தை கணிசமாக அதிகரிக்க முடியும் என கனடா இராணுவம் நம்புகிறது.

இரண்டாம் உலகப்போர் முடிவில் கனடா நாட்டின் இராணுவம் உலகின் வலுமிக்க படைகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது பிற வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடாவின் பாதுகாப்பு படை மிகவும் சிறியது. கனடா, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக அதற்கு அருகாமையில் இருப்பதாலும், நேட்டோ மற்றும் நோராட் ஆகிய இராணுவ கூட்டமைப்புகளில் உறுப்பினராக இருப்பதாலும் அதன் பாதுகாப்பு படை பெரிதாக இருக்க வேண்டிய தேவை இல்லை என்று சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *