இலங்கைப் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள்! – சு.க.மகளிர் பிரிவு கண்டனம்

இலங்கை காவல்துறையினரால் பெண்களுக்கு எதிரான அண்மைய துன்புறுத்தல் சம்பவங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) மகளிர் பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் காலி வீதியில் இரண்டு பெண் செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபடவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கடுவெல மாநகர சபை உறுப்பினர் குமாரி பத்திரகே, நாடு தற்போது பொலிஸ் அரசாக மாறி வருவதாக தெரிவித்தார்.

“இரண்டு பெண்களும் ஏராளமான காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர் மற்றும் அவர்களை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி இரண்டு பெண் போலீஸ் கான்ஸ்டபிள்களை அவதூறாக நடத்தியிருந்தார், அவரது செயற்பாட்டை நாங்கள் அனைவரும

மே பார்த்தோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

போலிசாரினால் மேற்கொள்ளப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். 

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரரை விடுதலை செய்யக் கோரி போராட்டம் நடத்திய இந்த இரண்டு பெண்களையும் எந்தச் சட்டத்தின் அடிப்படையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர்? இரண்டு பெண் அதிகாரிகளுக்கு நடந்த கொடுமையும் மிகவும் வருத்தமளிக்கிறது என்றதோடு.

சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்குமாறு அவர் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடம் கோரியுள்ளார். 

அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறினால், நாட்டிலுள்ள அனைத்து பெண்களையும் வீதிக்குக் கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் பிரிவு முன்னணியில் இருக்கும் எனவும் பத்திரகே தெரிவித்தார்.

ஒரு பெண் தெவுந்தரவில் இருந்து பருத்தித்துறைக்கு நடந்து செல்லும் அளவுக்கு பாதுகாப்பான நாட்டை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், இன்று ஒரு பெண் தன் சமையலறையை விட்டு வெளியே கூட வர முடியாத நிலை நாட்டில் உள்ளது. இப்படியே போனால், பெண்கள் வீட்டில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கக் கூட சுதந்திரம் இருக்காது. இலங்கை ஒரு பொலிஸ் அரசாக மாறியுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பாதுகாக்கப்படுவதை பொலிஸ் மா அதிபர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் உறுதியளிக்க வேண்டும் என பத்திரகே தெரிவித்துள்ளார்.

பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள். மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்குவதற்குப் பதிலாக நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கவும், என்று அவர் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *