சீரற்ற காலநிலையின் காரணமாக யாழ்ப்பாணம் – கச்சேரி வீதியில், செழிப்பு தந்த, இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்த மலைவேம்பு மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாக அருகில் இருந்த வீட்டு மதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இருப்பினும் தெய்வாதீனமாக வேறு உயிர்ச்சேதமோ, உடமைச் சேதங்களோ ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து யாழ்ப்பாண மாநகர சபையினரால், கச்சேரி – நல்லூர் பிரதான வீதி போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதுடன், வீழ்ந்த மரத்தை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
200 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த மரத்தினை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் பாதுகாக்க தவறியமை காரணமாகவே குறித்த மரம் வீழ்ந்துள்ளது என்று, குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இரவு வேளையில் மரம் வீழ்ந்தமையால் பாரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. எனினும், இது பகல் வேளையிலோ அல்லது சன நடமாட்டம் நிறைந்த நேரத்தில் இடம்பெற்றிருந்தால் உயிர் சேதங்களும் ஏற்பட்டிருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்