லண்டன்,நவ 15
ஜி7 நாடுகள் அமைப்பு எடுத்த முயற்சியால், ‘நிதி நடவடிக்கை செயற்குழு’ 1989இல் நிறுவப்பட்டது. இது சர்வதேச அரசாங்கங்களுக்கு இடையேயான அமைப்பாகும். நிதி நடவடிக்கை செயற்குழு பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்யப்படுவதை கண்காணிக்கிறது.
நிதி நடவடிக்கை செயற்குழு பரிந்துரையின்கீழ், இங்கிலாந்து அரசாங்கம் 2021ம் ஆண்டு ஏப்ரலில் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்தது. ஈரான், மியான்மர், சிரியா உள்ளிட்ட 26 நாடுகள் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் உள்ளன.
இந்த நிலையில், “அதிக ஆபத்துள்ள மூன்றாம் நாடுகள்” பட்டியலில் இருந்து பாகிஸ்தான், நிகரகுவா ஆகிய நாடுகளை நீக்கியுள்ளது இங்கிலாந்து அரசு. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போரிடுவதில் பாகிஸ்தானின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வரவேற்கப்படுவதாக நிதி நடவடிக்கை செயற்குழு கூறியுள்ளது.
பாகிஸ்தான் பணமோசடி மீதான ஆசிய-பசிபிக் குழுவுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று இங்கிலாந்து கருவூலம் வெளியிட்டுள்ள ஆலோசனை அறிவிப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ இங்கிலாந்து அரசு சட்டம் வெளியானது. இந்த சட்டதிருத்தம் “அதிக ஆபத்துள்ள மூன்றாம் நாடுகள்” பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்குகிறது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் சர்தாரி பூட்டோ தனது டுவிட்டரில் இந்த செய்தியை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.