
யாழ்ப்பாணச் சிறைச்சாலையில்,போதைக்கு அடிமையானவர்கள் சுமார் 38 பேர் வரையில் காணப்படுவதாகவும்,அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு இன்று பிற்பகல் விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய நபர்களை யாழ்ப்பாணச் சிறையில் சென்று இன்று பார்வையிட்டோம்.அவர்கள் என்ன வகையான போதைப்பொருளை பயன்படுத்துகிறார்கள்,என்று ஆராய்ந்தோம்.
அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் உள்ளது.ஆகவே சிறையில் உள்ள காலத்தில் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உழைப்புக்கான பயிற்சிகளை வழங்கலாம்,அதற்கு என்ன திட்டத்தை நடைமுறைப் படுத்தலாம் என்று ஆராய்ந்து வருகின்றோம்.
அவர்களின் மனதில் என்ன உள்ளது என்று எமக்கு தெரியாது.ஆனால் அவர்கள் வெளியே வரும்போது வாழ்க்கை ஒன்றை கொண்டு நடாத்துபவர்களாக மாறி இருக்க வேண்டும்.38 நபர்கள் தற்போதுவரை சிறையில் உள்ளனர்.யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருப்பதால்,மேலும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வெளியே வரும் சாத்தியங்கள் இல்லை.அதற்கு ஏற்ற வகையில் இறுக்கமான நடைமுறைகள் சிறைச்சாலையில் காணப்படுகிறது.பார்க்கலாம் இனி என்ன செய்யலாம் என்று என்றார்.