கொழும்பு,நவ 16
இலங்கையில் அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்கு இரும்பு கம்பிகள் பயன்படுத்தவில்லை என வெளியான செய்தி, உண்மைக்குப் புறம்பானது என ஏ எஃப் பி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
விக்டோரியா நீர்த்தேக்கம் இரும்புக்கம்பிகளின்றி சீமெந்தினால் மாத்திரம் நிர்மாணிக்கப்பட்டதாக முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டிருந்தன.
நீர்த்தேக்கத்தின் வலிமையானது இரும்புகளின்றி அமையாது என்ற போதிலும் விக்டோரியா நீர்த்தேக்கம், சீமெந்தினால் மாத்திரம் நிர்மாணிக்கப்பட்டது என்று இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, ஏ எஃ பி செய்தி நிறுவனம், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணி தொடர்பில் பொறியியல் வல்லுனர்களிடம் ஆய்வுகளை மேற்கொண்டது.
இதன்போது நீர்த்தேக்கத்தின் மேல் பகுதியில் குறிப்பாக, நீர் வெளியேறும் பகுதியில் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் பிரதிப்பணிப்பாளர், பொறியியலாளர் அஹலப்பிட்டிய ஏ எஃப் பி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
நீண்ட காலத்துக்கு முன்னர் நீர்த்தேக்கத்தை பார்வையிட வருகைத்தந்த ஒருவருக்கு, தொழில்நுட்ப தெளிவு இல்லாத, நீர்த்தேக்கத்தின் பணியாளர் ஒருவர் வழங்கிய தவறான தகவலே இந்த போலியானச் செய்திப்பகிரலுக்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விக்டோரியா நீர்த்தேக்கம், மகாவலி கங்கைக்குக் குறுக்கே 1978 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது.