கொழும்பு,நவ 16
நாடளாவிய ரீதியில் முதன்முறையாக, கேட்டல் குறைபாடு உடையவர்களுக்கான இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்னோடித் திட்டம் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் இன்று கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
1998 ஆம் ஆண்டு முதல் இலங்கை செவிப்புலனற்றோர் மத்திய சம்மேளனம் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண வழிகாட்டலின் கீழ் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், கடந்த 6 ஆம்திகதி சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் நடத்தப்பட்ட எழுத்துமூல பரீட்சைக்கு கம்பஹா மாவட்டத்தில் தோற்றிய கேட்டல் குறைபாடுள்ள 76 பேரில், சித்தியடைந்த 44 பேருக்கு தற்காலிக சாரதி பயிலுனர் அனுமதிப்பத்திரம் (Learner Permit) வழங்கப்பட்டது.
செவிப்புலனற்றோர் மத்திய சம்மேளனத்தைச் சேர்ந்த ஸ்ரீயான் கொடித்துவக்கு கருத்து தெரிவிக்கையில், சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதைப் பாராட்டுவதாகவும், இது தொடர்பாக உலக செவிப்புலனற்றோர் சம்மேளனத்திற்கு அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.