யானைகள் தொடர்பில் அடுத்த வருடம் கணக்கெடுப்பு

நாட்டில் அடுத்த வருடம் யானைகள் தொடர்பான கணக்கெடுப்பு  நடத்தப்படுமென வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நாட்டிலுள்ள யானைகள் தொடர்பான கணக்கெடுப்பு இறுதியாக 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

இந்நிலையில், புதிய கணக்கெடுப்பை அடுத்த வருடம் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக விவசாய,  வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
யானை – மனித மோதல்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டமொன்று விரைவில் தயாரிக்கப்படவுள்ளதாகவும், இதன் ஒரு அங்கமாக யானைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதில் யானை-மனித மோதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அநுராதபுரம், பொலன்னறுவை, இரத்தினபுரி, அம்பாறை மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் உள்ள கிராமங்களுக்கு காட்டு யானைகள் வருவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

யானைகள் வசிப்பதற்கான இடப்பகுதி குறைவடைந்தமை மற்றும் யானைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளமையானது யானை-மனிதல் மோதல் பிரச்சினைக்கு பிரதான காரணம் என இங்கு தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள யானைகள் பயணிக்கும் 16 தாழ்வாரங்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்துள்ளது. இந்த இடையூறுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

யானை பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் உள்ளடங்கலாக, நீண்டகாலத் தீர்வுத்திட்டமொன்றை விரைவில் தயாரிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் தனித்தனியான கூட்டங்களை ஏற்பாடு செய்து, அவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *