இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீர்ர் அலெக்ஸ் ஹேல்ஸ் இலங்கிலாந்தின் கிரிக்கெட் ஒழுக்காற்று ஆணைக்குழுவினால் (சிடிசி) கண்டிக்கப்பட்டுள்ளார்.
மாணவர் விருந்தில் கருப்பு நிறத்தை பூசிய முகத்துடன் இருக்கும் பழைய புகைப்படமொன்று தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்து, இவ்வாறு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ‘தி சன்’ என்ற பத்திரிகையில், ஹேல்ஸ் கறுப்பு முகத்தில் இருப்பதை காட்டும் பழைய புகைப்படம் ஒன்று வெளியானது.
2009 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு புகைப்படம் வந்த பத்திரிகை மூலம் வெளியானதையடுத்து எழுந்த சர்ச்சையின் பின்னர், ஹேல்ஸ் தமது இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் விதி 3.3 ஐ மீறியதாகவும் கிரிக்கெட் ஒழுக்காற்று ஆணைக்குழு முன்னிலையில் ஹேல்ஸ் ஒப்புக்கொண்டார்.
குறித்த விதியில், கிரிக்கெட் வீரர் அல்லது கிரிக்கெட் குழாமுக்கு அவப்பெயர் ஏற்படுத்தக்கூடிய, புறக்கணிப்பை ஏற்படுத்தும் மற்றும் கிரிக்கெட்டின் நலன்களுக்கு பாதகமான செயலை செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
அந்தவகையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள தொழில்முறை உள்நாட்டு விளையாட்டில் ஒழுக்காற்று வழக்குகளை விசாரிக்கும் கிரிக்கெட் ஒழுக்காற்று ஆணைக்குழு, அலெக்ஸ் ஹேல்ஸின் இந்த செயலானது “நிறவெறி மற்றும் பாரபட்சமான நடத்தை” எனக் கண்டறிந்தது.
இதுவே ஹேல்ஸை கண்டிக்க வழிவகுத்தது.
ஹேல்ஸ் அந்த நேரத்தில் அவரது நடவடிக்கைகள் இனவெறி செயற்பாடு என்று நம்பவில்லை. இருப்பினும் தற்போது அவர் முதிர்ச்சியடைந்தவர். தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார் என்று விசாரணைக்குழு கூறியது.
இதேவேளை, வார்விக்ஷயர் மற்றும் லெய்செஸ்டர்ஷயர் அணியின் முன்னாள் சகலதுறை வீர்ர் அதீக் ஜாவிட், ஃபேஸ்புக்கில் அசீம் ரபீக் என்ற வீரருடன் பரிமாறிக் கொண்ட யூத எதிர்ப்புச் செய்திகள் தொடர்பாக அசீம் ரபீக் கடந்த மாதம் இலங்கிலாந்தின் கிரிக்கெட் ஒழுக்காற்று ஆணைக்குழுவினால் கண்டிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், அதீக் ஜாவிட் 2019 ஆம் ஆண்டில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.