பாலியல் இலஞ்சம் கோரிய ராணுவ சிப்பாய் கைது

மாணவி ஒருவரின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படமாக திரிபுபடுத்தி, அம்மாணவியை பாலியல் ரீதியாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் நுவரெலிய குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான இராணுவ சிப்பாய் கேகாலை பகுதியில் வசித்து வருபவர் என தெரியவந்துள்ளது.

மேலும், அச்சுறுத்தப்பட்ட மாணவி பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்விய பயின்று வருவதாக கூறப்படுகிறது.

இராணுவ சிப்பாய் சமூக வலைத்தளங்களின் ஊடாக குறித்த மாணவியை தொடர்பு கொண்டுள்ளதோடு, அவரது புகைப்படமொன்றை நிர்வாண புகைப்படமாக மாற்றி இணையத்தளங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். எனவே, இணையத்தில் வெளியிடாமல் இருப்பதற்காக பாலியல் இலஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் நுவரெலிய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு அந்த மாணவி தகவல் வழங்கியதோடு, சம்பவ தினத்தில் சந்தேக நபரான இராணுவ சிப்பாயை நுவரெலியா பகுதிக்கு வருமாறு பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய அழைத்துள்ளார்.

பின்னர், சந்தேகநபரான இராணுவ சிப்பாய் நுவரெலியா நகருக்கு வருகைதந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவரிடமிருந்து ஆணுறைகள், பாலியல் ஊக்கி வில்லைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி அஞ்சன பெத்தும் குமார தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *