பாகிஸ்தான் டி20 கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலக வேண்டும்- அப்ரிடி வலியுறுத்தல்

கராச்சி, நவ 17

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.

ஆனால் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் இறுதி போட்டி வரை முன்னேறி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி போராடி தோல்வி அடைந்து இருந்தாலும் இந்த தொடர் முழுவதும் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் பெரிதாக சோபிக்கவில்லை.

அவர் பாபர் 7 போட்டிகளில் 124 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இதனால் கேப்டன்சி அழுத்தத்தால் பாபர் அசாம் பேட்டிங்கில் சோபிக்கவில்லை என அவர் மீது விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் பாபர் அசாம் டி20 கேப்டன் பதவியை கைவிட்டு, ஒருநாள் மற்றும் டெஸ்ட் உள்ளிட்ட நீண்ட வடிவங்களில் அணியை வழிநடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷாகித் அப்ரிடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய அப்ரிடி கூறுகையில்” பாபர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு.

அதனால்தான் டி20 கிரிக்கெட்டில் அவர் கேப்டன் பதவிக்கு அழுத்தம் கொடுப்பதை நான் விரும்பவில்லை. டி20 கிரிக்கெட்டில் கேப்டன் பதவியில் இருந்து பாபர் விலக வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்தி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணியை வழிநடத்த வேண்டும். டி20 வடிவத்தில் அணியை வழிநடத்த ஷதாப், ரிஸ்வான் மற்றும் ஷான் மசூத் போன்ற வீரர்கள் உங்களிடம் உள்ளனர்” என்றார். தற்போது 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை பாபர் அசாம் வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *