அடுத்த வருட இறுதியில் பணவீக்கம் 5% ஆக குறையும் – மத்திய வங்கி ஆளுநர்!

தற்போதைய நிதிக் கொள்கைகளுக்கு அமைய அடுத்த வருட இறுதியாகும் போது பணவீக்கத்தை 4 -5 சதவீதம் அளவில் பேணமுடியும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரின் தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடிய நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மத்திய வங்கி ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களின் மிதக்கும் வட்டி வீதத்தின்கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களுக்கு அறவிடப்படும் வட்டி வீதத்தை அதிகரித்ததனால் அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கிகளுடன் கலந்துரையாடி நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

இவ்வாறு வட்டி வீதம் அதிகரித்துள்ளதால் ஒரு சில கடன் பெறுநர்களின் முழு சம்பளத்தையும் கடன் தவணைகளுக்கு செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளதாக இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் வங்கிகளுடன் கலந்துரையாடி குறிப்பிட்ட சலுகைக் காலத்துக்கு உரிய வட்டியை மாத்திரம் செலுத்த முடியும் என்றும், அது தொடர்பில் வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 2 மாதங்களுக்கு முன்னர் 70 சதவீதமாகக் காணப்பட்ட சாதாரண பணவீக்கம் தற்பொழுது 66 சதவீதமாக குறைந்துள்ளதுடன், 95 சதவீதமாக காணப்பட்ட உணவுப் பணவீக்கம் 85 சதவீதமாக குறைந்துள்ளது.

அதற்கமைய, தற்போதுள்ள நிதிக் கொள்கைகளுக்கு அமைய இந்த மதிப்பீடுகளை அடுத்த ஆண்டு இறுதியாகும் போது 4 முதல் 5 சதவீதம் அளவில் பேணமுடியும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமொன்றாக மாற்றுவதற்கு புதிய சட்டமொன்றை தற்பொழுது வரைந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, வங்கிகள் ஊடாக டொலர்களை ரூபாவுக்கு மாற்றும் போது ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பிலும் இந்தக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மத்திய வங்கி ஆளுநரிடம் வினவியபோது, அவ்வாறு தாமதமடைவதற்கு காரணமான எந்த அறிவுறுத்தல்களையும் மத்திய வங்கி வழங்கவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கண்டறிந்து உரிய அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு வழங்குமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *