2014 ஆம் ஆண்டு கிழக்கு யுக்ரைனில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17 சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இரண்டு ரஷ்யர்களுக்கும், மொஸ்கோ சார்பு யுக்ரேனிய பிரிவினைவாதி ஒருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நெதர்லாந்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
போதியளவு சாட்சி இல்லாத காரணத்தினால் ரஷ்ய பிரஜை ஒருவர் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பிரதிவாதிகள், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாமலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின்-அம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையத்திலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்ற இந்த விமானம் – கிரிமியா, டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றை இணைக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது படைகளை அனுப்பிய சிறிது நேரத்தில் யுக்ரைனுக்கு மேலாக பறந்துக் கொண்டிருந்தது.
இதன்போது, ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையே தரையிலும் வானிலும் போர் இடம்பெற்றுக்கொண்டிருந்தது.
இதன் காரணமாக யுக்ரைனுக்கு மேலாக 32,000 அடி உயர வான்வெளிப்பகுதி விமானப் போக்குவரத்துக்காக தடை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 33,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போயிங் 777 ரக விமானம் MH 17 , GMT நேரத்தின்படி மதியம் 1:20 க்கு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதனையடுத்து, நெதர்லாந்து பாதுகாப்பு சபை, அமெரிக்க மற்றும் ஜெர்மன் உளவுத்துறை ஆகியவை இந்த விமானம், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக முடிவுக்கு வந்தன.
எனினும், ரஷ்ய அரசாங்கம் தமக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தது.
இந்த சம்பவத்தில் 153 சீன பிரஜைகள் உட்பட விமானத்தில் இருந்த 239 பேரும் உயிரிழந்ததாக கருதப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்று இந்த வழக்கு விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள், அம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குப் பறந்து கொண்டிருந்த போயிங் 777 விமானம், 2014 ஜூலை 17 ஆம் திகதியன்று மொஸ்கோ சார்பு யுக்ரேனியப் போராளிகளால் ஏவப்பட்ட பக் ஏவுகணையால் வீழ்த்தப்பட்டது என்பதை நிரூபித்ததாக நெதர்லாந்து நீதிமன்ற தலைமை நீதிபதி ஹென்ட்ரிக் ஸ்டீன்ஹுயிஸ் தமது தீர்ப்பின்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், விவசாய நிலங்கள் மற்றும சூரியகாந்தி வயல்களில் இருந்து சிதைவுகள் மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டதற்குமான சான்றுகளும் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டன.
ரஷ்யர்களான இகோர் கிர்கின் மற்றும் செர்ஜி டுபின்ஸ்கி மற்றும் யுக்ரேனிய பிரிவினைவாதி லியோனிட் கர்சென்கோ ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ரஷ்ய இராணுவ தளத்திலிருந்து பக் ஏவுகணை அமைப்பை யுக்ரைனுக்குள் கொண்டு சென்று அதை ஏவுவதற்கான நிலைக்கு கொண்டு வந்ததாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்த மூவரும் சம்பவத்தில் நேரடியாகக் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவர்கள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தப் பயன்படுத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணையை யுக்ரேனுக்குள் கொண்டுசெல்ல உதவியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
எனினும், அவர்கள் இதுவரை தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இதேவேளை வழக்கின் தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மூவருக்கும், இரண்டு வார கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இவர்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை யுக்ரேன் ஜனாதிபதி வரவேற்றுள்ளார். எனினும் ரஷ்யா அந்தத் தீர்ப்பைக் கடுமையாகச் சாடியுள்ளது.