மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: 2 ரஷ்யர்கள்- ஒரு உக்ரைனியருக்கு ஆயுள் தண்டனை!

மலேசியன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, 2 ரஷ்யர்கள் மற்றும் 1 உக்ரைன் கிளர்ச்சியாளர் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதி செய்தது.

விசாரணை நடத்திய சர்வதேச விசாரணைக்குழு, தனது விசாரணை அறிக்கையில் மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக 4 பேர் மீது குற்றம் சுமத்தியது.

இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும், லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை சுட்டு வீழ்த்தி 298 பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு நெதர்லாந்து நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது ரஷ்யர்களான இகோர் கிர்கின் மற்றும் செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் உக்ரைனைச் சேர்ந்த லியோனிட் கார்சென்கோ ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நான்காவது நபர் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதி நெதர்லாந்தில் இருந்து மலேசியாவுக்கு சென்ற மலேசியன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் உக்ரைன் வான்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணித்த 298 பேர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *