கொழும்பு,நவ 18
இந்த ஆண்டில் இதுவரை 44 ரயில்கள் தடம் புரண்டுள்ளன. நேற்றைய தினம் இரண்டு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொத்துஹெர ரயில் நிலையம் அருகே ரயில் ஒன்று தடம் புரண்டது. மற்றைய தடம் புரள்வு பிலிமத்தலாவ புகையிரத நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில ரயில் பாதைகள் மற்றும் புகையிரதங்களும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதற்குக் காரணம், நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டால் ரயில்வே உதிரிப்பாகங்கள் மற்றும் ரயில்வேக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கொள்ளுப்பிட்டிக்கும் கொம்பனி வீதிக்கும் இடையிலான பாலம் உடைந்துள்ளமையால் கரையோரப் பாதையில் புகையிரத தாமதம் தொடரலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து வெள்ளவத்தை வரை அனைத்து ரயில்களும் ஒரே ஒரு பாதையில் மட்டுமே இயக்கப்படுகின்றன. பழுதடைந்த பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளதால், வரும் திங்கட்கிழமை முதல் கடலோரப் பாதையில் ரயில் வழக்கம் போல் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.