வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் நில ஆக்கிரமிப்பு செயற்பாட்டை நிறுத்துங்கள்- சபா.குகதாஸ் கோரிக்கை!

வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் நில ஆக்கிரமிப்பு செயற்பாட்டை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  மன்னார் ஆயரை சந்தித்த போது தமிழர் தாயக நிலப்பிரதேசத்தில் தனியார் காணிகளை அபகரிப்பதற்கு ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன் என ஆயரிடம் கூறியுள்ளார்.

வடகிழக்கு தாயக பகுதியில் தனியார் காணியை சுவீகரித்தல் அல்லது அபகரித்தல்  என்பதற்கு அப்பால்  குறிப்பாக வடக்கு, கிழக்கு காணிகளை மத்திய அரசாங்கம் இராணுவ தேவைகளுக்கு அதிகமாக அபகரிக்கின்ற செயற்பாடு முன்நகர்த்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

இராணுவ தேவைக்காக வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கு அதிகமான நிலப்பிரதேசங்கள் அபகரிப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.அதனை விட 50 ஆயிரம் ஏக்கர் பிரதேசம் இராணுவ பண்ணைகளாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை ஜனாதிபதி அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.காரணம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஒரு லட்சம் ஏக்கர் காணிகள் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்படுவதற்கான படிவங்கள் நிரப்பிக் கொடுக்கப்பட்டன.

வடக்கில் எண்பதாயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளார்கள்.உள்நாட்டில் வேலை கிடைக்காமையால் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.

மாகாண காணிகளை மாகாண இளைஞர் யுவதிகளுக்கு ஜனாதிபதி வழங்க வேண்டும். இதுவே மக்களின் கோரிக்கையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *