டி20 கிரிக்கெட் உலக கோப்பை வீழ்ச்சி: சேத்தன் சர்மா தலைமையிலான மொத்த குழுவையும் கலைத்தது பிசிசிஐ

ஆஸ்தி,நவ 18

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அரையிறுதியுடன் இந்திய அணி வெளியேறிய நிலையில், வீரர்களைத் தேர்வு செய்யும் சேத்தன் சர்மா தலைமையிலான ஒட்டுமொத்த தேர்வுக் குழுவை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கலைத்திருக்கிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா தலைமையிலான இந்தக் குழுவில் மொத்தம் 4 பேர் அங்கம் வகித்தனர். சேத்தன் சர்மா தவிர ஹர்விந்தர் சிங் சுனில் ஜோஷி, தேபாசிஷ் மொஹந்தி ஆகியோர் இதில் இடம்பெற்றிருந்தனர்.

புதிய தேர்வுக் குழுவில் இடம் பெற விரும்புவோர் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ தனது இணையதளத்தில் அறிவித்திருக்கிறது. இதில் மொத்தம் 5 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் 7 டெஸ்ட் போட்டிகள், அல்லது 30 முதல் தர போட்டிகள், அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல் தர போட்டிகளில் ஆடிய அனுபவம் இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுவோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்.
கடந்த 2020-ஆம் ஆண்டில் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு உருவாக்கப்பட்டது. வழக்கமாக ஒரு தலைவர், நான்கு மண்டலங்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் இது இயங்கும். ஆனால் கலைக்கப்பட்ட தேர்வுக் குழுவில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த தேர்வாளர் யாரும் இல்லை.

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது?

கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரைப் போல அல்லாமல், இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வென்று சிறப்பான தொடக்கத்தை தந்தது. ரன்கள் எடுப்பதற்கு தடுமாறிக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்ட நட்சத்திர வீரரான விராட் கோலி இந்தத் தொடரில் அதிரடியாக மீண்டு வந்தார். குரூப் -2 பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி அந்தப் பிரிவிலேயே முதலாவதாக வந்தது.
உலகக் கோப்பை தொடரிலேயே சூப்பர் 12 சுற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றிருந்தது. இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்கள். அர்ஷ்தீப் சிங் நம்பிக்கையளிக்கும் வகையில் பந்துவீசினார். ஆனாலும் கோப்பையை வெல்வதற்கு இது போதுமானதாக இல்லை.

கத்தார் கால்பந்து உலக கோப்பை 2022: 25க்கும் அதிகமான மரணங்கள்; பதில் சொல்லாத கத்தார்

கால்பந்து உலகக் கோப்பை: புலம்பெயர் தொழிலாளர்களின் மரணங்களை குறைத்துக் காட்டுகிறதா கத்தார்?

கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட வேண்டுமா?

இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் உத்தி மோசமாக விமர்சிக்கப்பட்டது.
“இந்தியா பழைய பாணி கிரிக்கெட்டை ஆடிக் கொண்டிருக்கிறது” என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே சாடினார்.
முதல் 6 ஓவர்களில் இந்திய அணி மிகக் குறைவான ரன்களையே எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் பவர் பிளே முடியும் வரை நீடித்து நிற்காததால் விரைவாக அடித்து ரன்களைக் குவிக்க வேண்டிய தருணங்களில் இந்திய அணி தடுமாறியது.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்தியா முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 62 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அப்போது இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்திருந்தது.

தொடக்க ஓவர்களிலேயே இந்தியா விக்கெட்டை இழந்துவிட்டதால், விராட் கோலி மிக மெதுவாகவே ரன்களைச் சேகரிக்கத் தொடங்கினார். 10 ஓவர்களில் ரன்ரேட் குறைவாக இருந்ததால், சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆட முயன்று அவுட் ஆகி வெளியேறினார்.
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததுடன், ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட திறன்களும் விமர்சிக்கப்படுகின்றன. கேப்டனாக இருப்பது தனிப்பட்ட வகையிலும், தனிப்பட்ட முறையில் ரன் குவிக்கத் திணறுவது கேட்டன்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *