மக்கள் போராட்டம் தொடர்பில் ஆராய ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்!

“மக்கள் போராட்டம்” தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிப்பதற்கு ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

“அறகலயவை நாம் மறந்துவிடக் கூடாது.அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களை நாம் அனைவரும் மனதில் பதிய வைக்க வேண்டும். 1971, 1988, 1989, அறகலய என வித்தியாசமான அணுகுமுறையுடன் வந்த புரட்சிகள் அனைத்தும் ஊழல் அரசியல்வாதிகள், அரசியல் அமைப்பு மற்றும் பொது சேவைக்கு எதிரானவை. அதற்குக் காரணமான சூழ்நிலையை இந்த அரசாங்கம் நிர்வகிப்பதாக நான் பார்க்கவில்லை. நாங்கள் ஒரு ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும், அது குறித்த அறிக்கையை சபை பெற்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் சிறிசேன குறிப்பிட்டார்.
முந்தைய தசாப்தங்களில் அரசியல் பிரேத பரிசோதனை செய்து எந்த பயனும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மாறாக, அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்கால சந்ததியினருக்கு பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சில முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், சில இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிசேன குறிப்பிட்டார்.
நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உள்ளூர் செலவினங்களை நிர்வகித்தல் மற்றும் வளங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை முக்கியமானவை என சிறிசேன குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சரியான முறையில் நிர்வகிப்பதற்கு சமூக நீதி, சுதந்திரம், ஒழுக்கம், மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
உரத்தடை மற்றும் பொருளாதார நெருக்கடியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மீது அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிசேன தெரிவித்தார்.
இலங்கையில் மக்களின் உணவில் நான்கில் ஒரு பங்கு வன விலங்குகளால் அழிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிசேன குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இலங்கை ஒரு பௌத்த நாடாக இருப்பதால், ஏனைய நாடுகளைப் போன்று விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு தீர்வு காண முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *