பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார நெருக்கடியை தடுக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார சிந்தனைக்குழு (இன்ஸ்டிடியூட் ஒஃப் பொலிசி ஸ்டடீஸ்) இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இதன்படி, பாடசாலை மாணவர்களை தவிர்த்து, வயது வந்தவர்களின் பணமீட்டும் திறனை விரிவுபடுத்தும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
பொருளாதார சிந்தனைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தாழ்த்தப்பட்ட பகுதிகளில் உள்ள பெரியவர்களின் வருமான ஆதாரங்களை அதிகரிக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் துறை மாணவர்களின் அவல நிலையை மையமாகக் கொண்ட ஆய்வுகள், தோட்டப் பகுதிகளில் பாடசாலைகளை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
பெருந்தோட்டத் துறையில் ஏறத்தாழ 4 வீதமான ஆரம்பநிலை மாணவர்கள், 20 வீதமான இடைநிலை மாணவர்கள் மற்றும் 26 வீதமான கல்லூரி மாணவர்கள், தமது கல்வியை இடைநடுவில் நிறுத்தியுள்ளனர்.
இதற்கு நேர்மாறாக, நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் இந்த விகிதங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இது சமூகங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலிக்கின்றன.
இந்தநிலையில் பெருந்தோட்டச் சமூகங்களில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச உணவு திட்டத்தை தொடர வசதி செய்வது, சிறுவர் தொழிலாளர்களைக் குறைப்பதற்கான மற்றொரு சாத்தியமான தீர்வாக இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்குள் சிறுவர் தொழிலாளர் இல்லாத இலக்கை அடைய இலங்கை உறுதிபூண்டுள்ளது.
எவ்வாறாயினும், கொரோனா தொற்றுநோய் மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி என்பன 2025 ஆம் ஆண்டளவில் சிறுவர் தொழிலாளர்களை ஒழிக்கும் வகையிலான இலக்கு சவாலானதாக மாறியுள்ளதாக பொருளாதார சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது.