மனித கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் கைது!

ஓமான் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்கேதநபர் இன்று காலை வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 44 அகவையுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தின் செயலாளர் போன்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு அவர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறார்களுக்கு தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளார் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. 

சந்தேக நபர் தம்புள்ளை பிரதேசத்தில் 6 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தி வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சில நாட்களுக்கு முன்னரும் அவர் சுமார் 17 பணிப்பெண்களை அழைத்துச் சென்று ஓமானுக்கு ஆட்கடத்தல் மேற்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், குறித்த சந்தேக நபரின் கடவுச்சீட்டை முடக்கி, வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவை நீதிமன்றம் ஊடாக பெற்றிருந்தது. 

சந்தேகநபர் தற்போதைக்கு கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

உரிய விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள குற்றப் புலனாய்வுத்திணைக்கள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *