கொழும்பு,நவ 20
வடமேல் மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் கணக்காய்வு அதிகாரி ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அழகுக் கலை நிபுணர் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்ட கணக்காய்வு அறிக்கைகளின் போது சில முறைகேடுகள் தொடர்பில் தெரியவந்தமையை அடுத்து குறித்த அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு தொலைபேசியிலும் அவரது வீட்டுக்கு சென்றும் குழுவொன்றின் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் வாரியபொல மற்றும் வெள்ளவத்தை பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
26, 30 மற்றும் 33 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.