கோட்டா மீண்டும் நாடாளுமன்றுக்கு.. மக்கள் சக்தியில் மீண்டும் 'மொட்டு' அதிகாரத்தை கைப்பற்றும்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் எதிர்கட்சி தலைவர் விமர்சித்து வருவதாவது அவரது இயலாமையை காட்டுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கான் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சமகால அரசியல்  நெருக்கடி தொடர்பில் பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகளுடைய அறிக்கைகளை ஊடகங்கள் மூலம் காணக்கூடியதாக உள்ளது. 

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினை  பதவி விலகுமாறு கோரி போராட்டக்காரர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது எம்மை பொறுத்தமட்டில் குறித்த போராட்டம் வெற்றியளிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். பாம்படிக்க சென்றவர்கள் அதற்கான பொல்லை கொண்டு போகவில்லை என்று தான் கூற முடியும்.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறியவர்கள் அதற்கு பொருத்தமானவரை இனங்காட்ட தவறியமையானது அவர்களது போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியாகவே பார்க்கின்றோம். 

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பிற்பாடு எதிர்கட்சி தலைவர் கூட விமர்சிக்கின்ற அளவிற்கு அவர் ஆளாகியுள்ளார்.

ஆனால் நாடு பாதாளத்திற்கு சென்ற போது எதிர்கட்சி தலைவர் நிலைமையை அறிந்து ஜனாதிபதி பதவியை  ஏற்றிருக்க வேண்டும். அதை விடுத்து ஜனாதிபதியை தனிப்பட்ட ரீதியாகவும் வெளியிலும் விமர்சிப்பதானது அவரது இயலாமையை மீண்டும் மீண்டும் பறைசாற்றுவதையே நாம் பார்க்கின்றோம்.

இது தவிர பெரமுனவின் ஆதரவில் தான் ஜனாதிபதி பதவியில் ரணில் விக்கிரமசிங்க இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றார்கள். எதிர்கட்சி தலைவர் பாராளுமன்றத்தில் உள்ள ஆளுங்கட்சி எதிர்கட்சி உள்ளிட்ட அனைவரது ஆதரவிலேயே ஜனாதிபதி பதவியில் உள்ளார் என்பதை தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். 

இது தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பினர், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உள்ளிட்ட  சில எதிர்கட்சி தரப்பினர் கூட ரணில் விக்கிரமசிங்க நீண்டகாலமாக ஜனாதிபதி பதவியில் நீடிக்க வேண்டும் என ஆதரவினை வழங்கியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினை பதவி விலகச் சொன்னவர்கள் அப்பதவிக்கான சரியானவர்களை இனங்காட்டவில்லை என்பதே எமது கருத்தாகும்.

இன்று குறித்த போராட்டத்தின் நோக்கம் பலத்தை இழந்து நாட்டினை குழப்ப நிலைக்கு இட்டு சென்றுள்ளார்கள்.

எந்தவித நிவாரணமும் வழங்க முடியாத ஒரு போராட்டமாகவே இதனை பார்க்கின்றோம். எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்கள் சக்தியை பெற்று மீண்டும் அதிகாரத்தினை கைப்பற்றும் என்பதில் மாற்று கருத்து இல்லை. 

எதிர்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூட பாராளுமன்றத்திற்குள் வருவதற்கான  சந்தர்ப்பம் உள்ளது. மக்கள் எம்மோடு இணைவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *