_6379f386cb25f.jpg)
பெரும்பான்மையின மக்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் தேர்தலை நடாத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர், மக்களும் தயாகிறார்கள், இதனை கருத்திற்கொண்டு அரசாங்கத்தை கலைத்து தேர்தலை நடாத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஆளும் அரசாங்கத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச குழுவினர் தேர்தலுக்கு தயாராகாமல் மேலும் இரண்டரை வருடங்கள் ஆட்சியில் அமரலாம் என்பதையே பார்க்கிறார்கள்.
எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் தேர்தலுக்கு செல்ல வேண்டும். இதற்காக ஜனாதிபதிக்கு பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அதிகாரம் உண்டு.
நாடு பொருளாதார நெருக்கடி நிலையில் இருக்கும் போது சர்வதேச அமைப்புக்களான சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் ஆலோசனைகளை பெற வேண்டியுள்ளது.
நமக்கு நேசக்கரம் நீட்டிய இந்தியா, சீனா, ஜப்பான் நாடுகள், நம் நாட்டின் கொள்கையில் மாற்றம் வர வேண்டும் என கூறுகின்றனர்.
இதனால் வரவு செலவு திட்டத்தை விமர்சிக்காமல் ஆரோக்கியமான ஆலோசனைகள் இருப்பதை எதிர்க்கட்சியினர் கவனிக்கவேண்டியுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலின் கதை அடிபடுகிறது, இதனால் எல்லை நிர்ணய குழு மக்கள் கருத்துக்களை உள்வாங்க வேண்டும். இதனை பிரதமர் உட்பட பலரதும் ஆலோசனைகளை பெறவேண்டும், பொது மக்களது கருத்துக்கும் செவிசாய்க்க வேண்டும் என்பதே எங்களதும் நிலைப்பாடாகும்.- என்றார்.