தமிழர்களின் உரிமைக்காக குரல்கொடுப்போரை பல வழிகளில் அடக்கிஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் இந்த நாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
தமக்கும் தமது குடும்பத்திற்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்து கடிதம் ஒன்றும் தமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் இது இந்த நாட்டில் தமிழர்களின் உரிமைக்காக செய்படுவோரை அச்சுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடு எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
நேற்று தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் பொதுமக்களுடன் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்தபோது எனது வீட்டுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.அதில் வருகின்ற ஒரு மாதத்திற்குள் எனது மனைவி பிள்ளைகளை கொலைசெய்வதாகவும் பின்னர் உன்னை வீதியில் நாயைப்போல் அடித்து கொலைசெய்வோம் என்று அச்சுறுத்தும் வகையில் என அக்கடிதத்தில் அச்சுறுத்தப்பட்டிருந்தது.எனது மனைவி கடிதத்தினைப்பெற்று அது தொடர்பில் என்னிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
இந்த நாட்டில் தமிழர்கள் ஒரு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் அச்சத்தின் மத்தியிலும் வாழும் சூழ்நிலையில் இவை மிரட்டல்கள்,கடிதங்கள் மூலம் விடுக்கும் நிலைமையிருந்துவருகின்றது.இந்த அச்சுறுத்தல்களை செய்வதன் மூலம் எமது செயற்பாட்டினை கட்டுப்படுத்தமுடியாது.ஆரம்பகாலம் தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து தமிழ் மக்களின் உரிமைக்கான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும் எதிர்வரும் 27ஆம் திகதி விளக்கேற்றுவதற்காக அனைவரையும் ஒன்றுதிரட்டி சிரமதான பணிகளில் ஈடுபட்டுவருகின்றோம்.