நாள் பார்த்து இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமா? விசுவாசமாக சிரித்து தமிழர்களுக்கு பொறி வைக்கும் ரணில்! – அரசியல் ஆய்வாளர் கணிப்பு

நாள் பிரித்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா? இந்த இனப்பிரச்சினையை சர்வதேச மயநீக்கம் செய்தல் என்பது, தமிழ் மக்களை பலவீனப்படுத்தும் ஒரு உத்தி. இதற்கு தமிழ் மக்கள் பலியாக முடியாது. இந்த பின்னணியில் ரணில் ஒரு பொறி வைக்கிறார் என்பதுதான் உண்மை. இவர் விசுவாசமாக சிரித்தாலும், தமிழ் மக்களாகிய நாங்கள் பொறியாக தான் பார்ப்போம் என  அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்தார்.

‘சமூகம் மீடியா’வுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த சுதந்திர தினத்துக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அறிவித்திருக்கிறார். 

இவ்வாறு நாள் பிரித்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா? என்ற கேள்வி இருக்கிறது. அவர் சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற அனைத்துலக நிறுவனங்களை திசை திருப்புவதற்காக இப்படி அறிவிக்க கூடும். அதேசமயம் தமிழ் மக்களை பங்காளியாக மாற்றக்கூடும்.

தற்போது சிங்கள தரப்பு பலவீனமாக இருப்பதுடன், தமிழ் தரப்பும் சிதறுண்டு காணப்படுகிறது, இதனடிப்படையில் ஒரு பலவீனமான தீர்வினை தமிழ் மக்கள் தலையில் கட்டி விடலாம் என்று அவர் சிந்திக்க வாய்ப்பு இருக்கிறது. 

ஆயுத போராட்டத்தினை ஒடுக்குவதற்கு வெளித்தரப்புக்களின் விமானங்கள், வெடிபொருட்கள் போன்றவை எல்லாம் தேவைப்பட்டன. இதைவிட புலனாய்வு அறிக்கைகளையும், செய்மதி படங்களையும் பெற்றுக்கொண்டார்கள், ஆனால் இப்பொழுது சமாதானத்திற்கு வெளித்தரப்பு வேண்டாம் என்று சொல்லுகிறார்கள்.

இந்த இனப்பிரச்சினையை சர்வதேச மயநீக்கம் செய்தல் என்பது தமிழ் மக்களை பலவீனப்படுத்தும் ஒரு உத்தி. இதற்கு தமிழ் மக்கள் பலியாக முடியாது. இந்த பின்னணியில் ரணில் ஒரு பொறி வைக்கிறார் என்பது தான் உண்மை. இவர் விசுவாசமாக சிரித்தாலும், தமிழ் மக்களாகிய நாங்கள் பொறியாக தான் பார்ப்போம். 

இந்த பொறிக்குள் அவரையே சிக்க வைப்பது எப்படி? தமிழ் மக்கள் என்ன கேட்கிறார்கள் என்பதை ஒரே குரலாய் சொல்லுவது, இதற்கு தமிழ் கட்சிகள் ஒன்றாக சேர வேண்டும் அல்லது சிவில் அமைப்புக்கள் அதனை செய்ய வேண்டும். 

எல்லோரும் சமஸ்டி பண்புடைய தீர்வினைத் தான் முன்மொழிந்தார்கள். இலங்கை இனப்பிரச்சனை வரலாற்றில் தமிழ் தரப்பு அதிகரித்த முன்மொழிவுகளை வழங்கிய காலப்பகுதி என்று சொன்னால் அது 2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கத்திலிருந்து இன்றுவரையான காலப்பகுதியாகும்.

2016ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க நிலைமாறு காலநீதி செயன்முறையின் கீழ் ஒரு புதிய யாப்பினை உருவாக்கி அதில் இனப்பிரச்சினைக்கு  தீர்வினை உள்ளடக்கும் நோக்கோடு நாடாளுமன்றத்தை சாசன பேரவையாக மாற்றினார். இது யாப்புருவாக்க பணியினை முன்னெடுத்தது, அதனை 2018 ஆம் ஆண்டு மைத்திரி கவுத்தார். இதனுடன் அதன் பணி நின்றுவிட்டது.

இற்றை வரையில் தமிழ் தரப்பு கடந்த 6 ஆண்டு காலப்பகுதிக்குள் பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்திருக்கிறது. எல்லோருடைய கோரிக்கைகளும் ஒற்றையாட்சி வேண்டாம் ஒரு கூட்டாட்சி கட்டமைப்பு வேண்டும் என்று ஒரு சமஸ்டி தீர்வினை நோக்கித் தான் இருக்கிறது. 

இந்த சமஸ்டி தீர்வு பிரிப்பதற்கு இல்லை சேர்ந்து இருப்பதற்குத்தான் என சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.

எல்லோரும் வெவ்வேறு தரப்புக்களாக நின்று வைத்தது ஒரே கோரிக்கைதான் என்றதால், எல்லோரும் ஒரு மேசையில் வந்து, ஒரே குரலாய் கொடுக்கட்டும். அப்படி கொடுத்தால் அதன் மூலம் ரணில் தமிழ் மக்களை நோக்கி வைக்கக்கூடிய பொறியை, தமிழ் மக்கள் வெற்றிகொள்ளலாம்.

இவ்வாறு ஒரு கோரிக்கையினை முன்வைத்தோமாக இருந்தால், இப்போது ரணில் அரசாங்கத்தை பிணை எடுக்க முயலுகின்ற IMF போன்ற மேற்கத்தேய தரப்புக்களுக்கு ஒரு நிபந்தனை வைக்கலாம், என்னவெனில், இனப்பிரச்சனையைத் தீர்க்காமல் பொருளாதார நெருக்கடியினை நிரந்தரமாக தீர்க்க முடியாது.

இனப்பிரச்சினையை கவனத்தில் எடுக்காது, பொருளாதார நெருக்கடியினை தீர்ப்பது என்பது முறிந்து விழுகின்ற வாழைக்கு முட்டுக்கொடுக்கிற வேலைதான். 

எனவே நாங்கள் என்ன கேட்கிறோம் என்று ஒரே குரலில் நாம் சொல்லும்போது ரணிலின் பொறியினை நாம் வெற்றிகொள்ள முடியும். – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *