
வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை மீளவும் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் முடியாது மாறாக நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டுமானால் மக்களாணை மூலம் புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியினால் பதுளையில் நேற்றைய தினம் (19) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்த பின்னர் நாட்டில் காணப்பட்ட எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள் குறைந்துள்ளன.
ரணில் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்துள்ளார் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் நிலைமை அதுவல்ல. கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் இன்று வரையில் உலக நாடுகளுக்கு நாம் சுமார் 320 டொலர் கோடி செலுத்த வேண்டியுள்ளது. அடுத்த வருடம்நாடு 650 கோடி டொலர் வெளிநாட்டு கடன்களை செலுத்த வேண்டும்.இந்த நெருக்கடிகளை உருவாக்கியவர்கள் ரணில் போன்றவர்கள்.
எனவே மக்களாணை மூலம் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். நெருக்கடிகளால் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள நாட்டை தோல்வியடைந்த ஜனாதிபதிகளால் மீளவும் கட்டியெழுப்ப முடியாது.அன்று ஜனாதிபதி ரணிலின் வீட்டிற்கு தீ வைத்ததாக கூறினார்கள்.
குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தீப் பரவல் காரணமாக சுமார் 204 மில்லியன் ரூபா சொத்துக்களுக்கு சேதம் விளைக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் தீப் பரவல் காரணமாக வீட்டிற்கு 9 மில்லியன் ரூபா எனவும், அங்கிருந்த வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதம் 195 மில்லியன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு இருந்த 195 மில்லியன் பெறுமதியான வாகனங்கள் எதுவாக இருக்கும்? ஆம். அந்த வாகனம் அரசாங்கத்திற்கு சொந்தமானவை. மேலும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இருப்பது அரசாங்கத்திற்கு சொந்தமான வீடுகளாகும். என்று அவர் கூறினார்.
மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ஷஇ, கோட்டாபய ராஜபக்ஷ, சந்திரிக்கா குமாரதுங்க,மைத்திரபால சிறிசேன எதிர்க்கட்சியில் அமர்ந்து இருக்கும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்டோர் வசிப்பது அரசாங்கத்திற்கு சொந்தமான வீடுகளிலேயேயாகும்.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாட்டு மக்களுடைய சொத்துக்களை கோடி கணக்கில் மோசடி செய்தும், கொள்ளையிட்டும், அரச வரப்பிரசாதங்களை பெற்று சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.நாம் மக்களுக்கு இந்த நேரத்தில் உறுதிமொழியினை வழங்குகிறோம்.
அவர்களின் சகல வரப்பிரசாதங்களையும் நாம் இல்லாது செய்வோம். மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தேர்தல் மூலம் மக்களாணையின்றி தீர்வு காண முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.