கால்பந்து உலகக்கிண்ணம்: கட்டாரை வீழ்த்தி ஈக்வடார் முதல் வெற்றி!

கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில், ஈக்வடார் அணி சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

குழு ஏ பிரிவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தொடக்க போட்டியில், தொடரை நடத்தும் கட்டார் அணியும் ஈக்வடார் அணியும் மோதின.

அல் பேத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஈக்வடார் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டி ஆரம்பமாகி 15ஆவது நிமிடத்தில் கட்டார் வீரர் சாத் அல் ஷீபுக், ஈக்வடார் வீரர் எனர் வாலென்சியாவை தள்ளிவிட்டதால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டதோடு, ஈக்வடார் அணிக்கு பெனால்டி வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட எனர் வாலென்சியா, போட்டியின் 16ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை அணிக்காக கோலாக மாற்றினார். இதன்மூலம் அவர், நடப்பு கால்பந்து உலகக்கிண்ணத் தொடரில், முதல் கோலை அடித்த பெருமையை பெற்றார்.

இதனைத்தொடர்ந்து போட்டியின் 31ஆவது நிமிடத்தில், சக வீரர் பிரெசியாடோ தூக்கியடித்த பந்தை வாலென்சியா தலையால் முட்டி அணிக்காக இரண்டாவது கோலையும் பெற்றுக்கொடுத்தார்.

இவ்வாறாக முதல் பாதி முடிவில் ஈக்வடார் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதியில், இரு அணி வீரர்கள் கடுமையாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், இறுதியில் ஈக்வடார் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *