அக்கரைப்பற்று பிரதேசத்தில் டெங்கு அதிகமாக பரவுவதால் அதை கட்டுப்படுத்துவதற்கு இறுக்கமான தீர்மானங்கள் எடுப்பது தொடர்பில் சென்ற வாரம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்று பிரதேச சபையின் எண்ணக் கருவில் உருவான வாரத்துக்கு ஒரு நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைய பள்ளிக்குடியிருப்பு 1ம், 2ம் பிரிவுகளில் பொதுமக்களின் பூரணமான ஒத்துழைப்போடு, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ றாசிக் தலைமையில் வீடுகள் மற்றும் பொது நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டது.
இதில் அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான ரீ.எம் ஐய்யுப், ஏ.ஜி.எம்.பர்சாத் , எம்.சஹாப்தீன் கல்முனை பிராந்திய தொற்று நோய்ப் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ. சீ.எம். பசால், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எப் எம் ஏ காதர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள், இராணுவ படையினர், வட்டாரங்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது டெங்குகள் பரவக்கூடிய அபாயகரமாக அடையாளம் காணப்பட்ட வீடுகள், பொதுக் காரியாலயங்கள் கண்காணிக்கப்பட்டு துப்பரவு செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்காக அனைத்து பணிகளையும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.