நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்றன.
இந்தத் தேர்தலில் 1.79 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான தகுதியை பெற்றிருந்தனர். நாடளாவிய ரீதியில் மொத்தமாக 22 ஆயிரம் வாக்களிப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 2,412 வேட்பாளர்களில் 867 பேர் சுயேட்சையாக போட்டியிட்டனர்.
275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
அதே போன்று, 550 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.
காலை 7 மணி முதலே நேபாள பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்த நிலையில், மாலை 5:00 மணிக்கு வாக்களிப்புகள் நிறைவடைந்தன.
இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 60 சதவீத வாக்குள் பதிவானதாக நேபாள தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆளும் நேபாள காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தொங்கு நாடாளுமன்றம் அமையலாம் என்றும், போதுமான அரசியல் ஸ்திரத்தன்மையை வழங்க வாய்ப்பில்லாத அரசாங்கம் அமையும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதனிடையே, தேர்தலின் இறுதி பெபேறுகள் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.