தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்களுடன் இணையலாம் – டி.ஜெயக்குமார்

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்களுடன் இணைந்து கொள்ளலாம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”ஓ.பன்னீர்செல்வம் ஆரம்பத்தில் இருந்து சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் உடன் தொடர்பில் இருந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அந்த குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினார். எந்த குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினாரோ அதே குடும்பத்தை ஓ.பன்னீர்செல்வம் சென்று பார்க்கிறார்.

இதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. அ.தி.மு.க.வில் 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டனர். மாவட்ட செயலாளர்கள் முதல் கிளை செயலாளர்கள் வரை 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் போது ஒரு சதவீதம் ஆதரவு கூட இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும்.

அது ஒரு பொய்க்குழு. முறைப்படி கிளை கழகம், பேரூர் கழகம், ஒன்றிய, நகர கழகம், மாவட்ட கழகத்திற்கு தேர்தல் நடத்திய பிறகு பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படி இருக்கையில், இப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆட்கள் தேவை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை அழைத்து பொறுப்பு கொடுத்து இதை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார். கட்சிக்கு தியாகம் செய்தவர்கள்தான் பொறுப்பில் இருக்க வேண்டும்.

ஆனால் ஓ.பன்னீர்செல்வத்திடம் எந்த வரலாறும் இல்லாதவர்களே பொறுப்பில் உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களே உள்ளனர். ஓ.பி.எஸ். நடத்துவது ஒரு கட்சி அல்ல, அது ஒரு நிறுவனம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *