பாதீட்டில் முன்மொழியப்பட்டுள்ள விசேட தேவையுடையோர் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான கொடுப்பனவு தொடர்பில் நாடாளுமன்றில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இன்றைய விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம், விசேட தேவையுடையோர், நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுவந்த 5000 ரூபா கொடுப்பனவு 2500 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மானியங்கள் தருவதாக தெரிவித்த ஜனாதிபதி? வழங்கப்படும் மானியங்களையும் குறைப்பதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் ஷேமசிங்க, கடந்த 7 மாதங்களில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பல தடவைகள் இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுவந்தது.
கடந்த காலங்களில் இந்த கொடுப்பனவுகளை வழங்க சில நிறுவனங்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கின. ஜனவரியில் இருந்து அவையும் கிடைக்கவில்லை. எனினும், எந்தவித குறைப்பும் இன்றி குறித்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. இதற்காக அரசாங்கத்தின் நிதி பயன்படுத்தப்பட்டது.
எனவே, எந்த கொடுப்பனவுகளும் குறைக்கப்பட்டவில்லை என்றார்.
இதன்போது, குறுக்கிட்ட சாணக்கியன், பின்னிணைப்பு 5 இல் கொடுப்பனவு குறைத்துவழங்கப்படும் என்றே குறிப்பிட்டுள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்த இராஜாங்க நிதியமைச்சர், 5000 ரூபாவுக்கு மேலதிகமாக எதிர்வரும் 4 மாதங்களுக்கு இந்த 2500 ரூபாவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், ஜனவரி மாதத்தில் எவருக்கேனும், இந்த கொடுப்பனவுகள் குறைத்து வழங்கப்பட்டிருந்தால் தம்மிடம்வந்து முறையிடுமாறு அவர் கோரினார்.
இதனை தொடர்ந்து உரையாற்றிய, நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல, சமுர்த்தி பயனாளிகள், விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்படும் என பாதீட்டில் ஜனாதபதி தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த பாதீட்டில், எதிர்வரும் 4 மாதங்களுக்கான உத்தேச கொடுப்பனவு என்று 2500 ரூபா குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை உத்தேச மேலதிக கொடுப்பனவு என்று மாற்றினால் இந்த குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது.
எனவே, எவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களை திசை திருப்பவேண்டாம் என்றார்.