ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள வித்தியாபுரம் கிராமத்தில் முல்லைத்தீவு விவசாய திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தொழில்நுட்ப முறையில் வயல் விழா சிறப்புற்றது.
காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாய திட்ட நிறுவனத்தின் அனுசரணையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பரசூட் முறை மூலமான நாற்று நடுகை, இயந்திர நாற்றுநடுகை, ‘ரம்’ விதையிடும் கருவி மூலமான விதைப்பு ஆகிய 3 தொழில்நுட்ப முறைகளில் நாற்றுகள் நடப்பட்டன.
அத்துடன் விவசாயிகளுக்கு குறித்த 3 தொழில்நுட்ப விதைப்பு முறைகள் குறித்து செய்முறை ரீதியாக விளக்கமும் விவசாய நிபுணர்களால் வழங்கப்பட்டது.
நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர், முல்லைத்தீவு மாவட்ட விவசாய பணிப்பாளர் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளர், காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாய திட்டத்தின் விவசாய நிபுணர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஒட்டுசுட்டான் பாடவிதான உத்தியோகத்தர்கள் , விவசாய போதனாசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.