
பெண் தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் முகமாக அவர்களின் உற்பத்திப் பொருள்களை மக்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் இணையத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மகளிர் விவகாரம் தொழிற்துறை சமூக சேவைகள் கூட்டுறவு அமைச்சின் செயலாளர் ரூபினி வர்தலிங்கம் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டலின் கீழ் தொழிற்றுறை திணைக்களத்தால் நேற்று மாதாந்த மகளிர் சந்தை இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கைத்தொழில் திணைக்களமும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களின் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களின் தொழில் தரத்தை உயர்த்துவதற்கு முதற்கட்டமாக தொழில்நுட்ப ரீதியாக வலைத்தளங்களில் அவர்களது உற்பத்திப் பொருள்களை விளம்பரப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான சந்தை வாய்ப்பை அதிகளவில் பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கமாகும். கைத் தொழில் தொழிற்றுறை திணைக்களம், கிராம அபிவிருத்தித் திணைக்களம், கூட்டுறவுத் திணைக்களம் ஆகியவை இணைந்து இந்த வேலைத்திட்டங்களை முன்னனெடுத்துள்ளன– – என்றார்.