வடக்கு உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு விசேட திட்டம்

வடக்கு மாகாணத்திலுள்ள கைத்தொழில் உற்பத்தி முயற்சியாளர்களை ஊக்குவிக்க விசேட திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அதற்கென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

யாழிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் தலைமைச் செயலகத்துக்கு முன்பாக கைத்தொழில் திணைக்களமும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து வடக்கு மாகாண ஆளுநரின் நெறிப்படுத்தலில்  கைத்தொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் கண்காட்சியும் விற்பனையும் அண்மையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கில் கைத்தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க ஆளுநர் செயலகம் தயாராகவுள்ளது. அதற்கான செயற்றிட்டங்களை உருவாக்கல் மற்றும் வழிமுறைகள் ஆகியவை குறித்து உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். புதிய பேருந்து நிலையம், புகையிரத நிலையம் ஆகியவற்றில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் உற்பத்திப்பொருள்களை  சந்தைப்படுத்த ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.

அத்துடன் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன்  சுற்றுலா பயணிகளை கவரும் முகமாக உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருள்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வடக்கு மாகாண கைத்தொழில் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவித்து சந்தைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளேன் – என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *