நுவரெலியாவில் தமிழ் மொழியை ஓரம் கட்டும் அதிகாரிகள்!

இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமாகவும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகின்ற பகுதியாகவும் காணப்படும் நுவரெலியாவில் தமிழ் சார்ந்து அதிகாரிகளுக்கான அக்கறை மீண்டும் குறைந்துள்ளதாகவும்.  இதனால் தமிழ் மொழி மட்டும் தெரிந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது .

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் அதிகம் வந்து செல்லும் மேலும் தமிழ் பேசும் மக்கள் அதிகம் செரிந்து வாழும் நுவரெலியாவில் இத்தகைய மொழி  ஆக்கிரமிப்பு செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவது அதிர்ச்சி அடையவைக்கிறது. 

நுவரெலியா தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வேண்டுகோளுக்கு அமைய, தூர பிரதேசங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்குள் உள்ளே நிறுத்தப்படாமல் நுவரெலியா பதுளை பிரதான வீதியில் பேருந்து நிறுத்துவதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்விடத்தில் சிங்கள மொழியில் மாத்திரம் பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.சிங்கள மொழி தெரியாதவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் போக்குவரத்து போலீசாரால் அவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுகிறது. இதனால் அதிகமான சாரதிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே அரசின் மும்மொழிக் கொள்கைக்கு சம அந்தஸ்து வழங்கி மும்மொழிகளிலும் அறிவிப்பு பலகைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு பொது மக்கள் மற்றும் சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *