மாட்டிறைச்சி கடை மீது கை வைக்கும் ஜீவன் தொண்டமான்

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட புளியாவத்தை நகரில், மாட்டிறைச்சி கடை நடத்தும் முயற்சியை இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் நிறுத்தியுள்ளார்.

புளியாவத்தை பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமையவே ஜீவன் தொண்டமான் குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என ஜீவன் தொண்டமானின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

புளியாவத்தை நகரின் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் மாட்டிறைச்சி கடை அமைக்கப்படுவதால் இது எங்கள் மதத்தை இழிவுபடுத்தக் கூடியது என்று புளியாவத்தை பிரதேச மக்கள் அதற்கு எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

எனவே குறிப்பிட்ட மாட்டிறைச்சி விற்பனை கடை அமைக்க புளியாவத்தை நகரில் ஆரம்பிக்க தடைவிதிக்க வேண்டும் என புளியாவத்தை பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இது தொடர்பில் ஜீவன் தொண்டமானிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

அதேநேரத்தில் நோர்வூட் பிரதேச சபை ஊடாக புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடை ஒன்று அமைக்க கேள்வி (டெண்டர்) அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.  இதன்படி மாட்டிறைச்சி கடை டெண்டருக்காக நோர்வூட் பிரதேச சபை 15 இலட்சம் ரூபாய் அறிவித்த நிலையில் நபர் ஒருவர் டெண்டருக்காக குறித்த பணத்தை பிரதேச சபைக்கு செலுத்தியுள்ளார்.

மக்களின் கோரிக்கைகாக  புளியாவத்தை பகுதிக்கு சென்று பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய ஜீவன் தொண்டமான், நோர்வூட் பிரதேச சபை விடுத்துள்ள மாட்டிறைச்சி கடைக்கான டெண்டர் அறிவித்தலை நிறுத்தி டெண்டருக்காக பெறப்பட்ட 15லட்சம் ரூபாவை உரியவரிடம் கையளிக்குமாறு தவிசாளர் குழந்தை ரவிக்கு பணித்துள்ளார். மேலும் குறித்த காலத்தில் அவர் சபரிமலை செல்வதற்கு மாலை போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *