கொட்டக்கலை மருந்தகங்களில் பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை

 கொட்டகலை பிரதான பாடசாலைகளில் ,கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கையும் இது போன்று போதைக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களை மீட்கும் வேலைத்திட்டமும்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் புஷ்பா விஸ்வநாதன் மற்றும் நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் தலைமையில் ,கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் இந்து ஆலய மண்டபத்தில் 20.11.2022 திகதி மாலை இந்த செயல்திட்டம் நடைமுறைப்படுத்தவதற்கான ஆரம்கட்ட கலந்துரையாடல்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள்,பொலிஸார், நகர வர்த்தகர்கள், மதகுருமார்கள், வாகன சாரதிகள், பெற்றோர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட கொட்டகலை பிரதான பாடசாலைகள் மற்றும் தோட்டப்புற பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி கற்கும் பெருமளவிலான மாணவர்கள் பல்வேறு போதைப்பொருட்களை பாவிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள் என வருத்தம் தெரிவித்தனர்.

அவ்வாறான மாணவர்கள் இனங்காணப்பட்டு அந்த மாணவர்களை வகுப்புக்களுக்கு தடைவிதித்து அதற்கமைவாக போதைப்பொருள் பாவனையிலிருந்து ஏனைய மாணவர்களை காப்பாற்ற பெற்றோரின் ஆதரவுடன் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமென அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதான பாடசாலைகள் மற்றும் தோட்டப்புற பாடசாலைகளில் 6 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரையிலான வகுப்புகளில் உள்ள மாணவர்களின் வருகை மிக குறைவாக  காணப்படுவதாகவும் பல மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்துவதாகவும் அந்த மாணவர்களும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டபட்டது.

அத்தோடு கொட்டகலை நகரில்  குறிப்பிட்ட சில மருந்துக் கடைகளில்  பாடசாலை மாணவர்களுக்கு போதை மருந்துகளை விற்பனை செய்வதாகவும் போதைப்பொருளை வாங்கிய பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வந்து மிக இரகசியமாக போதைப் பொருட்களை பயன்படுத்துவதாகவும் அதிபர்கள் இதன்போது தெரிவித்தனர்.

போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை பற்றி பொலிஸாருக்கு தகவல்களை வழங்க பொது மக்கள் உதவி செய்ய வேண்டும் என நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *