யாழ். வலய மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு இன்றையதினம் யாழ். இந்து மகளிர் கல்லூரியின் பொது மண்டபத்தில், யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு, கொடியேற்றல் வைபவத்தினை அடுத்து, மங்கள விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
இன்றைய கன்னி அமர்வில், வலய மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் சத்தியப்பிரமாணம், சபாநாயகர் தெரிவு, சபாநாயகர் சத்தியப் பிரமாணம், சபாநாயகர் சம்பிரதாய பூர்வமாக சபைக்கு அழைத்து வரப்படுதல், சத்தியப்பிரமாணம், அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம், அமைச்சுக்களின் அறிமுகமும் முன்வைப்புகளும், சபாநாயகர் பாராளுமன்றத்தை நிறுவுதல் ஆகியன இடம்பெற்றிருந்தன.
வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில், விசேட விருந்தினர்களாக கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி சு.பரமானந்தம், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் த.பாலராஜ், வடமாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் அ.சுபாகரன், யாழ். இந்து மகளிர் கல்லூரி அதிபர் எம். நிமலநாதன், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர் பாராளுமன்ற சபாநாயகர், மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



