
எதிர்க்கட்சியில் அமர்ந்து வெறுமனே பதாகைகளை ஏந்துவதால் எம்மை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மக்களுக்கு எதையும் செய்ய முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் இலாபமீட்டாத நிறுவனங்கள் மட்டுமன்றி இலாபமீட்டும் ஒரு சில நிறுவனங்களையும் மறுசீரமைப்பு செய்து வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்துக் கொள்வது அவசியம். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது மிக அவசியமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பெருமளவு வருமான வரி கிடைக்காமல் உள்ளது. வருமான வரியை அறவிடுவதில் முறையான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். புதிதாக அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இம்முறை ஊவா மாகாணத்தில் 354 பேர் மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடம் ஒன்றைப் பெற்றுத் தருமாறு நான் ஜனாதிபதியைக் கேட்டுக் கொள்கிறேன். எமது மக்களின் தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். எமது மக்களும் அதையே தெரிவிக்கின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.