மாமியை கத்தியால் குத்திய மருமகன் தப்பியோட்டம் !

தெரிபா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெலகம பகுதியில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் முகுனகஹபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர்.

உயிரிழந்தவரின் மகள் குடும்பத்தகராறு காரணமாக பல வருடங்களாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று அவர்கள் தெரிபா பொலிஸ் பிரிவில் உள்ள ஹெலகம கிராம அதிகாரி அலுவலகத்திற்கு அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் உலர் உணவைப் பெறுவதற்காகச் சென்றிருந்தனர்.

அங்கு மகளின் கணவர் பெயரில் உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள மகளும் தாயும் முயன்ற போது தகராறு ஏற்பட்டு மகளின் கணவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாயையும் மனைவியையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார்.

படுகாயமடைந்த இரு பெண்களும் தெரிபா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் தாய் உயிரிழந்துள்ளார்.

27 வயதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று (23) வலப்பனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெரிபா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *