
கொழும்பில் உள்ள ஏஜென்ட் மூலம் , வெளிநாட்டு வேலைக்காக அனுப்பப்பட்ட தமிழ் பெண் ,பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருவதாக தெரிவித்து ,கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் ,யாழ் மாவட்ட பிராந்திய காவற் தூது அலுவலகத்தில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு பாதிக்கப்பட்டவரின் கணவர் கருத்து தெரிவிக்கையில்:
நான் கிளிநொச்சியில் வசிக்கின்றேன்.திருமணம் நடைபெற்று ஒன்றரை வருடங்கள் ஆகிறது.கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஏஜென்ட் மூலம் எனது மனைவி வீட்டு வேலைக்காக அனுப்பப்பட்டார்.வெளிநாடு சென்று மூன்று மாதங்கள் ஆகிறது.பல நாட்களாக மனைவியுடனான தொடர்பு எனக்கு கிடைக்கவில்லை.
அதன் பின்னர் ஒரு வாரத்துக்கு முன்னர் மனைவியின் தொடர்பு எனக்கு கிடைத்தது.அங்கே என் மனைவி ஏஜென்ட் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்தார்.அதாவது வீட்டு பணிப்பெண் வேலைக்கு என்று ஏஜென்ட் மூலம் அனுப்பப்பட்ட அவர்,ஏதோ கொம்பனி வேலைக்கு அமர்த்துப்பட்டுள்ளார்.
பின்னர் வேறு வேலை ஒன்றுக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.18 மணித்தியாலம் வேலை,3 மணித்தியாலம் தூக்கம் ,வாரத்தில் ஒரு முறை தொலைபேசியில் பேச முடியும்,காலை உணவாக 2 ரஸ்க் துண்டுகள்,இரவு ஒருவேளை சாப்பாடு என கொடுமைகளை அனுபவிக்கின்றார்.
ஆகவே அவரை எப்படியாவது மீண்டும் நாட்டுக்கு அழைக்க வேண்டும் என்று ஏஜென்ட் அலுவலகத்துக்கு சென்று கேட்டேன்.அவர்கள் என்னை துரத்தி விட்டனர்.இப்போது யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் முறையிட்டுள்ளேன் என்றார்.