இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பல மோசடிகளை செய்கிறது: முஜ்பூர் ரஹ்மான்

கொழும்பு,நவ 23

இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கு பதிலாக மேலும் பல மோசடிகளை மேற்கொள்ளும் அரச நிறுவனமாக இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழு செயற்படுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜ்பூர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் முஜ்பூர் ரஹ்மான் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

இலஞ்ச ஊழல் மற்றும் விசாரணை ஆணைக்குழுவை வினைத்திறன் மிக்க நிறுவனமாக மாற்றவேண்டும்.

குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிலர் முறையாக விசாரணைகளை மேற்கொள்ளும் போது அரசியல் செல்வாக்கின் மூலம் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

இதனால் ஊழல் விசாரணைகள் முடங்கிப்போயுள்ளதுடன் இலட்சக்கணக்கான விசாரணைகள் நிலுவையில் உள்ளன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பொறுப்பற்ற வகையில் தனது பணியை முன்னெடுக்கின்றது.

நாடாளுமன்றுக்கோ சபாநாயகருக்கோ, எவருக்கும் பொறுப்புகூற வேண்டியதில்லை என்பதால் முறையற்ற வகையில் அந்த ஆணைக்குழு இயங்கி வருகின்றது.

எனவே மக்களுக்கு பொறுப்பு கூறுகின்ற நிறுவனமாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மாற்றம் பெறுவது அவசியமாகும்.

இதேவேளை, சட்டத்தரணி லால் விஜயநாயக்கவினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை நாடாளுமன்றில் சமர்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் கோரிக்கையை இன்று விடுத்துள்ளார்.

குறித்த அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக பல மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

இந்தநிலையில் புதிதாக அரசியலமைப்பை உருவாக்க அவசியமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்து தொடர்பில் தமது விமர்சனத்தை தெரிவித்தபோதே, முஜ்பூர் ரஹ்மான் இந்த கருத்தை வெளியிட்டார்.

அதிகாரப் பரவலாக்கத்துக்கு ஆதரவளிப்பீர்களா? என்று ஐக்கிய மக்கள் சக்தியிடம் கேட்பதை விடுத்து பொதுஜன பெரமுனவின் கருத்தை முதலில் ஜனாதிபதி அறிந்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் அவர்களே, அதிகாரப்பரவலாக்கலுக்கு எதிரானவர்கள்.

எனவே அவர்களின் கருத்தை அறிந்த பின்னரே ஜனாதிபதி இந்த விடயம் குறித்து பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *