மும்பை,நவ 23
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், பிரபல நடிகையுமான அதியாவும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு ஜோடியாக சுற்றுலா செல்வது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த ராகுல் -அதியா ஷெட்டி ஜோடி இந்த ஆண்டு தாங்கள் காதலிப்பதை உறுதி செய்தனர்.
இந்நிலையில், தற்போது இந்த ஜோடியின் திருமணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அதியா ஷெட்டி – கே.எல்.ராகுல் ஜோடியின் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த சூசகமான அறிவிப்பை நடிகர் சுனில் ஷெட்டியும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். பட விழா ஒன்றில் கலந்துகொண்ட சுனில் ஷெட்டியிடம் உங்கள் மகளின் திருமணம் எப்போது என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சுனில் ஷெட்டி, விரைவில் அவர்களது திருமணம் நடைபெறும் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.