யாழில் பாடசாலைக்குள் நுழைந்து ஆசிரியரை தாக்கிய தந்தை கைது!

யாழில் பிரபல பாடசாலையொன்றில் ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்ட மாணவனின் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர் ஒருவலை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று இரவு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதன்போதே சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சந்தேகநபரை கைது செய்யக்கோரி நேற்று பாடசாலை ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழில் பிரபல பாடசாலையொன்றில் ஆசிரியர் மீது மாணவனின் தந்தை ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் அப்பாடசாலையின் உடற்பயிற்சி ஆசிரியரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்.

அங்கு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் மாணவனை ஆசிரியர் விசாரித்த போது மாணவன் அங்கிருந்து தப்பி சென்று, தனது தந்தையாரை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளான்.

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை, ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்த குறித்த ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர்கள் அங்கிருந்து மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆசிரியர் மீதான இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *