
மாத்தளை நகர மத்திய சந்தை கட்டிடத்திற்கு முன்னால் அமைந்துள்ள பிரதான மணிக்கூட்டு கோபுரத்தில் உள்ள கடிகாரம் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக செயலிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சுமார் நூறு வருடங்கள் பழமை வாய்ந்த இந்த மணிக்கூட்டு கோபுரம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது என்றும் இந்த மணிக்கூட்டு கோபுரம் சரியான நேரத்தை காட்டியதாகவும் மாநகர ஆட்சியாளர்களால் இந்த மணிக்கூட்டு கோபுரத்தின் கடிகாரத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்றி அமைக்கப்பட்டதன் பின்னரே இந்த கோபுர கடிகாரம் செயலிழந்து போனதாகவும் பொதுமக்கள் அங்கலாய்கின்றனர்.
இது தொடர்பாக மாத்தளை மாநகர முதல்வர் மற்றும் மாநகர ஆணையாளர் ,மாநகர சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோருக்கு பலமுறை தெரிவித்த போது இது தொடர்பான எந்த முன்னெடுப்பும் இதுவரை நடைபெறவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
மாத்தளை நகர சபையை சேர்ந்த அனைவரும் மணிக்கூட்டு கோபுரத்தை கடந்து செல்லும் போதும் கடிகாரம் அவர்கள் பார்வையில் தென்படாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. மேலும் நகர மக்கள் மற்றும் நகரத்திற்கு புதிதாக வரும் பயணிகள் ,பாடசாலை மாணவர்கள் என இந்த மணிக்கூட்டு கோபுரத்தை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.