திருத்தப்பட்ட ரயில் நேர அட்டவணையை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரத்திற்குள் நேர அட்டவணை தயாரிக்கும் பணிகள் நிறைவடையும் என ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அட்டவணையை விரைவில் வெளியிட்டு, அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் திகதியை அறிவிக்க எதிர்ப்பார்ப்பதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.
ரயில் வேகத்தடை விதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள கால தாமதம் காரணமாக, ரயில் நேர அட்டவணையை திருத்த ரயில்வே திணைக்களம் அண்மையில் தீர்மானித்திருந்தது.
இதற்கிடையில், ரயில் தாமதம் காரணமாக, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கொழும்பு மாவட்டத்திற்கு வௌியில் இருந்து வரும் அதிகாரிகளுக்கு திட்டமிடப்பட்ட கடமை நேரத்திலிருந்து வருவதற்கு அரை மணித்தியாலமும், புறப்படுவதற்கு ஒரு மணிநேரமும் அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடமைக்கு இடையூறு ஏற்படாத வகையில் உரிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அவகாசம் பெறும் அதிகாரிகள் மதிய உணவு நேரத்தின் போது இயன்றவரை சம்பந்தப்பட்ட கடமைகளை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.